*பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே 7 கிராமங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை கைவிட வலியுறுத்தி
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பிள்ளைபனங்குடி, கோபுராஜபுரம், குத்தாலம், நரிமணம், புலவநல்லூர், சன்னியாசி பனங்குடி, வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட 7 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அன்றாடம் சென்றுவர பனங்குடி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில் நாகப்பட்டினம், நாகூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பனங்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகையிலிருந்து விழுப்புரம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலையை உயரப்படுத்துவதால் பனங்குடி சாலையை எடுத்துவிட்டு 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் வகையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் 7 கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு சென்றுவர முடியாத நிலை இருப்பதாக தெரிவித்து அப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நாகூர்-நன்னிலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் நாகூர்-நன்னிலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post நாகப்பட்டினம் அருகே நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் appeared first on Dinakaran.