
கவுகாத்தி,
அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார். அந்த சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
சிறை காவலர்களான அவர்களிருவரும், தனியாக சென்ற அந்த இளம்பெண்ணை கவனித்துள்ளனர். அவர்கள் கவுகாத்தியின் பஞ்சாபாரி மற்றும் பொரகாவன் பகுதிகளை சேர்ந்தவர்கள். அந்த தெருவில் யாரும் இல்லாத நேரத்தில், இளம்பெண்ணை அவர்கள் இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்து சென்றனர்.
அந்த பெண் கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. இதன்பின்பு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, அந்த வழியே போலீசார் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். அவர்கள் தகவல் அறிந்து சென்று, சிறை காவலர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஸ்ரீபூமி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு பிரணாப்ஜோதி கலிதா கூறும்போது, 2 பேரும் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். வழக்கு பதிவாகி உள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றார். அசாமில், நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்ணை, பாதுகாக்க வேண்டிய பணியில் உள்ள காவலர்களே, வீட்டுக்குள் இழுத்து சென்று கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.