நம்பர்-1 வீரர் சின்னர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி: மகளிர் பிரிவில் ஜெசிகா பெகுலா அசத்தல்

20 hours ago 3

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் ஆடிய உலகின் நம்பர்-1 வீரர் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய 3ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆகியோர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டி ஒன்றில், போர்சுக்கல் வீரர் ஹென்ரிக் ரோச்சா தன்னை எதிர்த்து களம் கண்ட ஜக்குப் மென்சிக்கை 2-6, 1-6, 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டியில் முதல் 2 செட்களை இழந்த நிலையில், அதிரடி ஆட்டம் மூலம் அடுத்தடுத்த 3 செட்களை கைப்பற்றி ரோச்சா வெற்றி வாகை சூடினார். மற்றொரு போட்டியில், உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேப்ரியல் சிர் கேஸ்கட்டை வீழ்த்தி, மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே சின்னர் அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். இன்னொரு போட்டியில், உலகின் 3ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து வீரர் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் ஒரு போட்டியில் 31 வயதான உலகின் 3ம்நிலை வீராங்கனையான அமெரிகாவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை அன் லீயை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் செக் குடியரசு வீராங்கனை மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்து வீராங்கனை மாக்டலீனா ப்ரெச்யை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் 6ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா அலெக்ஸாண்ட்ரோவ்னா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஸ்லின் க்ரூகரை வீழ்த்தி, அடுத்த மூன்றாம் சுற்றில் அடியெடுத்து வைத்தார்.

The post நம்பர்-1 வீரர் சின்னர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி: மகளிர் பிரிவில் ஜெசிகா பெகுலா அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article