
லீட்ஸ்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இங்கிலாந்து அணி 77 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் அடித்துள்ளது. ஹாரி புரூக் 57 ரன்களுடனும், ஜேமி சுமித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்றைய ஆட்டம் தொடங்கிய 12-15 ஓவர்களிலேயே பந்தின் தன்மை மாறிவிட்டது. வேறு புதிய பந்தை தரும்படி நடுவர்களிடம் அடிக்கடி முறையிட்டனர். இருப்பினும் நடுவர்கள் இந்திய அணியினரின் கோரிக்கைகளை நிராகரித்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் நடுவரிடம் நேரடியாக சென்று பந்தின் தன்மையை குறிப்பிட்டு காட்டி முறையிட்டார். ஆனாலும் நடுவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பண்ட் பந்தை வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.