
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படம் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டூட்' படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். புதிய படம் தொடர்பாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.
'டிராகன்' படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "அஸ்வத் 'ஓ மை கடவுளே' படம் இயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் என்னை அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டார். ஆனால் நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் 'லவ் டுடே' படத்தை ரிலீசுக்கு முன்பு அஸ்வத்துக்கு காண்பித்தேன். அதன் பிறகு, என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறாயா என்று அவரிடம் கேட்டேன். 'லவ் டுடே' படம் ஹிட்டானதால் உடனே நாங்கள் அடுத்த படத்தில் இணைந்தோம். என்னுடைய இயக்கத்தில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்துவிட்டேன். மற்றவர்களுடைய டைரக்ஷனில் நடிக்க முடியுமா என்று பேசுவார்கள். இந்தப் படம் ஹிட்டாகியிருக்கிறது. நான் ஆடியன்ஸாகிய உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.