நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய வசனங்கள், காட்சிகளை தெரிவிக்க வேண்டும்: சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

1 week ago 8

சென்னை: நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி 2024 செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது.

இதை எதிர்த்தும், படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி யும் அளித்த மனுவை பரிசீலிக்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும் பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் எந்த காட்சிகள், எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிடவில்லை என்று வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று குறிப்பிடாமல் எடிட் செய்ய வேண்டும் என்றால் எப்படி முடியும். படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும். இந்த காட்சிகள் மற்றும் வசனங்களை மனுதாரருக்கு தெரிவிப்பது குறித்து சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரர்களுடன் திரைப்படத்தை பார்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்களை சுட்டிக் காட்டலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய வசனங்கள், காட்சிகளை தெரிவிக்க வேண்டும்: சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article