
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருவாகியது லியோ திரைப்படம். இப்படத்தில் `நான் ரெடி தான் வரவா' பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடலிற்கு நடன இயக்குநராக இருந்தவர் தினேஷ். இப்பாடலில் 1000-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடியிருப்பர். ஆனால் அதில் ஆடிய நடன கலைஞர்களுக்கு சரியான சம்பளம் போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் அவர்களுக்கான நியாயம் கேட்டு போராடினார் ஆனால் பலனில்லை. அந்த பாட்டில் 35 லட்ச ரூபாய் முறைக்கேடு செய்ததாக நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் உள்ளார். கனடாவில் வசிக்கும் நடன இயக்குனரான கௌரி சங்கர் என்பவரை தாக்கியதாகவும் தினேஷ் மாஸ்டர் மீது ஒரு புகார் இருக்கிறது. மேலும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த நடன இயக்குனர் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌரி சங்கர் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கனடாவில் இருந்து சங்கத்திற்கு வந்த கௌரி சங்கரை தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த குற்றச்சாட்டுகளுக்காக தினேஷ் மாஸ்டரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வெண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தன் மீது தவறு உள்ளதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் கூறியதாலேயே அவசர பொதுக்குழு கூட்டப்பட்டதாக துணை தலைவர் கல்யாண் தெரிவித்துள்ளார். தற்போது பதவி விலகுவதற்கான படிவத்தில் கையெழுத்திட மறுத்ததால் தினேஷ் மற்றும் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி கல்யாண் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். "லியோ படத்தின் 'நான் ரெடி தான் வரவா' பாடலில் 1500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றனர். நடன இயக்குனர்கள் சங்க உறுப்பினர் தவிர வெளி நடன பள்ளியை சேர்ந்த நடன கலைஞர்களும் இந்த பாடலில் பங்கேற்றனர். நடன கலைஞர்களுக்கான பணம் அனைத்தும் தயாரிப்பாளர் அலுவலகம் மூலம் அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது" என பதில் அளித்துள்ளார்.
'மனதை திருடி விட்டாய்' படத்தில் நடன இயக்குனராக அறிமுகமான தினேஷ் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பிரபுதேவாவின் தந்தை நடன இயக்குனர் ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய இவர், பிரபு தேவாவின் அண்ணன் நாகேந்திர பிரசாத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். பிரபுதேவாவின் நடனக் குழுவிலும் மிகச்சிறந்த நடனக் கலைஞராக இருந்தார். 'ஆடுகளம்' படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். இவர், 'லோக்கல் சரக்கு', 'நின்னு விளையாடு', 'ஒரு குப்பை கதை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.