சென்னை: நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிதாக 9 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.