
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சுமதி (வயது 55). இவர் அண்ணாநகரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடன் அம்பத்தூரைச் சேர்ந்த லதா(47) என்பவர் வேலை செய்து வந்தார். லதா தங்கி இருந்த அறையில் தண்ணீர் வராததால் தனது தோழியான சுமதி வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
அப்போது சுமதி வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 7 சவரன் நகையை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தோழி வீட்டில் தங்கி இருந்த லதா, தங்க நகையை திருடி அடகு வைத்து பணம் பெற்றதும், சுமதிக்கு சந்தேகம் வராமல் இருக்க கவரிங் நகைகளை வைத்ததும் தெரிந்தது. லதாவை போலீசார் கைது செய்தனர்.