தொண்டர்க்கு அமுதம்

1 day ago 3

திருவாய்மொழியில் ஒரு அற்புதமான பாசுரம்.
கண்டுகொண்டு என் கண்ணிணையாரக்களித்து
பண்டைவினையாயின பற்றோடறுத்து
தொண்டர்க்கமுதுண்ணச்சொல்மாலைகள் சொன்னேன்
அண்டத்தமரர்பெருமான் அடியேனே.(9.4.9)
ஒவ்வொரு பாசுரதிலும் ஒரு உயிர்ச்சொல் உண்டு.

இந்தப் பாசுரத்தின் உயிர்ச்சொல், ‘‘தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் சொன்னேன்” என்பதுதான். “நான் இறைவனைக் கண்டுகளித்தேன். அவனுடைய பேரருளால் என் வினைகளை எல்லாம் வேரோடு அறுத்துக் கொண்டேன்” என்று தொடங்குகிறார்.இவைகள் எல்லாம் நிச்சயம் ஆழ்வாருக்கு ஆனந்தம் தான். ஆனால் இந்த ஆனந்தத்தைத் திருவாய்மொழியாகப் பாடி வைத்தார் அல்லவா, அப்படிப் பாடி வைத்ததன் மூலம் பக்தர்களுக்கு மிகப்பெரிய உபகாரம் செய்தார் அல்லவா, அப்படிச் செய்ததால் வந்த ஆனந்தம்தான், தனித்து பரமாத்மாவை அனுபவித்த ஆனந்தத்தை விட மஹா ஆனந்தம்.

தனியன் இந்தப் பாசுரத்தில் உள்ள தொண்டர்க்கு அமுது என்ற வார்த்தையை, சுவாமி நாதமுனிகள், தான் வடமொழியில் இயற்றிய திருவாய்மொழித் தனியனில் முதல் வார்த்தையாக வைத்தார்.“ஆரா அமுதே” என்ற பாசுரத்தைக் கேட்டு, அதில் கடைசிப் பாசுரத்தில், ஆயிரத்துள் இப்பத்தும் என்ற வார்த்தையைக் கொண்டு, மீதி உள்ள பாசுரங்களைத் தேடி அலைந்து, நம்மாழ்வார் மூலமே பெற்றார் நாதமுனிகள். திருவாய் மொழியைத் தவிர மற்ற ஆழ்வார்களின் பாசுரங் களையும் நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகப் பெற்றார்.

அதனால் ஒவ்வொரு பிரபந்தத்தையும் ஒவ்வொரு ஆழ்வார் பாடி இருந்தாலும் கூட, நம்மாழ்வாருக்கு ஆழ்வார் என்கிற பொதுப் பெயர் நிலைத்தது. இந்தப் பாசுரங்களை இயலும் இசையும் கொண்டு தொகுத்த நாதமுனிகள், ஒவ்வொரு பிரபந்தத்திற்கும், தனியன் என்று ஒரு தனிப் பாடலை வடமொழியிலோ தமிழ் மொழியிலோ இயற்றும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

வைணவத்தில் ஒரு பிரபந்தத்தை, கோயிலிலோ வீட்டிலோ ஓதத் தொடங்கும் பொழுது, அதற்குரிய பாயிரம் போல அமைந்த தனியனை ஓதாமல் தொடங்கும் வழக்கம் இல்லை.
இந்த மரபை ஏற்படுத்தியவர் நாதமுனிகள்.

ஆழ்வார்களின் எல்லா பிரபந்தங்களுக்கும் இப்படித் தனிப் பாடல்கள்
( தனியன்கள்) உண்டு.

இந்தத் தனியனே அந்தப் பிரபந்தத்தின் பெருமையையும் ஆழ்வாரின் பெருமையையும் சொல்லிவிடும்.

பக்தாம்ருதம்

அதில் முதல் தனியனை திருவாய்மொழிக்கு நாதமுனிகள் இயற்றினார். அதன் முதல் வார்த்தை பக்தாம்ருதம் என்பது. தொண்டர்க்கு அமுது என்று சொன்ன நம்மாழ்வாரின் பாசுர வார்த்தையையே
பக்தாம்ருதம் என்ற வடமொழி வார்த்தையாக வைத்துத் தொடங்கினார்.அந்தத் தனியன்தான் இது.

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப
வாங்க்மயம் |
ஸஹஸ்ர ஸாகோப நிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம் ||
இதன் பொருள்:

பக்தர்களுக்கு அமுதமாய் இருப்பது.அறிவாளிகள் அனைவராலும் கொண்டாடப்படுவது. அறிய வேண்டிய அர்த்தங்கள் அனைத்தையும் அறிவிப்பது. ஆயிரம் பாடல்கள் கொண்டது. தமிழ் வேதமாக இருப்பது. நம்மாழ்வார் அருளியது.இத்தனைப் பெருமையையும் உடைய திருவாய்மொழிக் கடலைச் சரணம் அடைகிறேன்.இந்தத் தனியனின் முதல் வார்த்தை பக்தாம்ருதம்.

ஆரா அமுதே
இந்த வார்த்தையில் ஒரு நுட்பம் இருக்கிறது சுவாமி நாத முனிகள் நாலாயிரம் பாசுரங்களைத் தொகுப்பதற்கு அவர் காதிலே விழுந்த வார்த்தை “ஆரா அமுதே”.
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருக்குடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!(5.8.1)

இந்த அமுதம் தான் திருவாய்மொழியைத் தேடிச் செல்ல வைத்தது .நாலாயிரத்தையும் பெற்று தந்தது. ஆராவமுதே என்று இறைவனை நம்மாழ்வார் அழைத்தார். அப்படி அழைத்துப் பாடியதுதான் திருவாய்மொழி.நாதமுனிகள் ,எம்பெருமான் ஆராவமுதனாக இருக்கட்டும் அது ஆழ்வாருக்கு அமுதம்.

ஆனால் ஆரா அமுதனை மங்களா சாசனம் செய்யும் திருவாய் மொழி அல்லவா பக்தர்களுக்கு அமுதம் என்று பொருள் படும்படியாக தம்முடைய தனியனின் முதல் வார்த்தையை பக்தாமிர்தம் என்று அமைத்தார்.

இறைவன் ஆரா அமுதம்
திருவாய்மொழி பக்தாம்ருதம்.
இதை இப்படியே வைத்துக்கொண்டு மேலே செல்வோம்
பக்தாம்ருதம் என்பதற்கு என்ன பொருள்?

பக்தாமிர்தம் என்பது பக்தர்களுக்கு அமுதம் என்று பொருள். இதிலே இரண்டு சொற்கள் இருக்கின்றன.
பக்தன்(தொண்டன்) ஒரு சொல். அமுதம் ஒரு சொல். இரண்டும் சேர்ந்த சொல் பக்தாம்ருதம்.

இந்த இரண்டு சொற்களுக்கும் பொருளைத் தனித்தனியாகப் பார்த்து, பிறகு இணைத்துப் பார்த்தால் பல சுவாரஸ்யமான செய்திகள் நமக்குக் கிடைக்கும்.

பக்தன்

பக்தன் என்றால் பக்தி உடையவன். பக்தி என்பது இறைவன் மீது கொண்ட அன்பு. பக்தியோகம் என்று கீதையிலே கண்ணன் மிக விரிவாக இதன் பொருளை எடுத்துரைக்கிறார். பக்தி எப்படி இருக்க வேண்டும்? தைல தாரை போல இருக்க வேண்டும்.பகவான் திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ, நலமந்த மில்லதோர் திருநாட்டில் (வைகுண்டத்தில்) இருக்கிறான். அது ஆனந்தம்தான். அதைவிட ஆனந்தம் பக்தனோடும் பாகவதனோடும் சேர்ந்திருப்பது. இதற்கு உரிய ஸ்லோகம் இது.

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)
பக்தி என்பது மிகப்பெரிய விஷயம். நாம் கோயிலுக்குப் போய் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை கும்பிட்ட வுடன் பக்தர்கள் என்று நினைத்துக் கொள்கின்றோம். அப்படி அல்ல.அசஞ்சலமான நினைவுதான் பக்தி. பக்தர்களின் அன்பு அவர்களின் ஒவ்வொரு சொல்லையும், எண்ணத்தையும், செய லையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் வெளிப்படுகிறது. அப்படிப் பட்ட பக்தர்களை இறைவன் கொண்டாடுகின்றான்.

“என்னுடைய பக்தன், என்னுடைய பிராணன்” என்று கீதையில் பகவான் சொல்லுகின்றார்.வராக சரம ஸ்லோகத்திலே, யார் ஒருவன் சதா சர்வ காலமும் தன்னுடைய நாடி நரம்புகள் சௌக்கியமாக இருக்கும் பொழுது இறைவனைச் சிந்தித்து இறைவன் நாமத்தைச் சொல்லுகின்றானோ, அவனை என் பக்தன் என்று நான் நினைப்பேன். அவன் என்னுடைய நாமம் சொல்ல முடியாமல் வாய் குழறி சிந்தை தடுமாறி அந்திம தசையில்(மரணப்படுக்கையில்) கிடக்கும் பொழுது என்னுடைய பக்தன் என்று நினைத்து அவனை நான் கடைத் தேற்றுவேன் என்று சொல்லுகின்றார்.

பகவான் யாருக்கு எளியவன் என்றால் பக்தர்களுக்கு எளியவன்: “பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகன்” என்பதால் பத்தி இல்லாதவர்களை எல்லாம் ஒரு பக்கமாகத் தள்ளுகிறார் . பக்தி இல்லாதவர்கள் கௌரவர்கள். பக்தி உடையவர்கள் பாண்டவர்கள்.

அதனால் பாண்டவர்களைச் சொல்லும்பொழுது “நான் எப்படி என்னுடைய பாண்டவர்களை விட முடியும் ? என்கிறான். “பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை” என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

பக்தியில் ஒன்பது நிலை உண்டு.நவவித பக்தி என்பார்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத-சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சாக்யம் ஆத்ம – நிவேதனம்’

இப்படி பக்தன் என்ற சொல்லுக்கு பல பொருள்,குணங்கள் உண்டு.தொண்டர் என்ற சொல்லும் பக்தனைக்குறிக்கும்.இனி அமிர்தம் என்ற சொல்லின் பொருளை ஆராய்வோம்.

அமிர்தம்

ம்ருதம் என்றால் நிலையற்றது. மரணம் என்று பொருள். அம்ருதம் என்றால் நிலையானது. மரணமற்றது.

மரணத்திற்கு (ம்ருத்யு)எதிர்ப்பதம் அமிருத்யு. மரணத்திற்கு மரணம் தருவது என்று பொருள்.நரசிம்ம அவதாரத்தைச் சொல்லும் மந்திரத்தை நாம் தினசரி வழிபாட்டில் சொல்லுகிறோம். அவனை ம்ருத்யும்ருத்யு என்று அழைக்கின்றோம். மரணத்திற்கு மரணம் கொடுப்பவன் என்று பொருள். இதை பிரகலாதன் சரித்திரத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். தான் பெற்ற குழந்தையாகிய பிரகலாதனுக்கு தந்தை யான இரண்யன் பல விதங்களில் மரணத்தைத் தர முயல் கிறான். நரசிம்ம மகாபிரபு அந்த மரணத்திற்கு மரணத்தைத் தந்து பிரகலாதனைக் காப்பாற்றுகின்றார். அதனால் அவன் ம்ருத்யும்ருத்யு ஆகின்றான்.

இது ஒரு புறம் இருக்கட்டும்

அமிர்தம் என்பது சாகா மருந்து. இழந்ததைத் பெற்றுத் தருவது. அதற்கு பாற்கடல் கடைந்த சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமிர்தம் என்பதற்கு சுவையானது என்று ஒரு பொருளும் உண்டு. இச்சொல்லை நாம் வாழ்க்கையில் பலமுறை உபயோகப்படுத்துகிறோம். ஒரு பேச்சு நன்றாக இருந்தால் அமிர்தம் போல பேசுகின்றார் , வாக்கு அமிர்தமாக இருக்கிறது என்கிறோம்.

சாப்பிடும் பொருள் நன்றாக இருந்தால், ‘‘அடடா… என்ன சுவை அமிர்தம்போல தித்திக்கிறதே என்கிறோம். இது பொருளுக்கு மட்டும் இல்லை. ஒரு ஸ்பரிசமோ அல்லது ஒருவருடன் சேர்ந்து இருக்கும் காலமோ இனிமையாக இருந் தால் நமக்கு அமிர்தம் என்கின்ற உணர்வைத் தரும்.

பஞ்சாங்கத்தில் கூட ஒரு யோகத்தை அமிர்த யோகம் என்று குறிப்பிடுவார்கள். அந்த நேரத்திலே எந்த சுப காரியத்தையும் செய்யலாம் என்பார்கள். பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை பகவான் தேவர்களுக்கு அளித்தான். ஆனால் அவன் ஒரு அமிர்தத்தை தனக்காக எடுத்துக் கொண்டான். அந்த அமிர்தம்தான் மகாலட்சுமித் தாயார்.

உரையாசிரியர்கள் இந்த இடத்தைச் சொல்லும்பொழுது, கேவலம் உப்புச்சாற்றை தேவர்களுக்குத் தந்து விட்டு பெண் அமுதத்தை (மஹாலஷ்மியை) இவன் கொண்டான் என்று சொல்வார்கள்.
திகட்டாதது எதுவோ அது அமிர்தம். வைணவத்தில் எல்லாமே அமுதுதான். அமுதுபடி, சாற்றமுது, கறியமுது, திருகன்னமுது(பாயாசம்) என்று எல்லாவற்றுக்கும் அமுது சேர்ப்பார்கள்.
எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழுக்கு அமுதென்று பேர் அல்லவா.

அதனால்தான் தமிழ் மொழியில் பாடிய திருவாய்மொழியை பக்தாம்ருதம் என்று நாதமுனிகள் சொன்னார்.யாருக்கு யார் அமுதம்? எது பக்தாமிர்தம்?

இப்போது இந்த இரண்டு வார்த்தையும் இணைத்தால் வைணவத்தில் எதைக் குறிக்கிறது?

1. பக்தருக்கு அமுதம்.

2. பக்தனே அமுதம் என்று இரண்டு பொருள் வருகிறது அல்லவா ?இப்பொழுது இந்த அமிர்தத்தை மூன்று வகையாகப் பிரித்துப் பார்த்து எது பக்தாம்ருதம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

1. முதல் அமுதம் இறைவன்.

அதனால்தான் பகவானே ஆரா அமுதே என்று அழைத்தார் நம்மாழ்வார். ஆரா அமுதே என்றால் எத்தனை அனுபவித்தாலும் திகட்டாத அனுபவமாக இருக்கும் என்று பொருள். “அளப்பரிய ஆரமுதை” என்றார் திருமங்கையாழ்வார். அந்த அமுதத்தைப் பருக வேண்டும் என்பதற்காக நம்மாழ்வார், வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காண் என்று பாடுகின்றார். திருமங்கை ஆழ்வாரும் “ஆவியே அமுதே” என எம்பெருமானை நினைத்து உருகுகின்றார்.திருப்பாணாழ்வார் “அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினை” என்று பகவானை அமுதமாகச் சொன்னார். “குவலயத் தோர் தொழு தேத்தும், ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை” என்று திருமங்கையாழ்வார் இன்னொரு பாசுரத்தில் சொன்னார்.

ஆழ்வார்களுக்குப் பக்தியில் ஆழ்ந்தவர்கள் என்பதால் பக்தர்கள் என்ற சொல்லாட்சி உண்டு. ஆழ்வார்களாகிய பக்தர்கள் விரும் பிய அமிர்தம் என்பதால் இறைவனை பக்தாமிர்தம் என்று சொல்லலாம். நம்மைப் போன்ற சாதாரண பக்தர்களும் இறைவனை அமுதமாக நினைப்பதால் பக்தாமிர்தம் என்று இறைவனைச் சொல்லலாம்.

2. ஆழ்வார்(பக்தர்) எனும் அமுதம்.

நம்மாழ்வார் பகவானை அமிர்தமாக நினைத்து விழுங்கிவிட நினைக்கிறார். ஆனால் பகவான் நம்மாழ்வாராகிய பக்தனை அமுதமாக நினைத்து தான் விழுங்கிவிட நினைக்கிறார். இருவருக்கும் போட்டி நடக்கிறது. இதிலே வென்றவர் யார் என்று சொன்னால், பகவான்தான் அவன் சக்தி மிக்கவன் இல்லையா?.

வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன்காணில்
என்று ஆர்வுற்ற என்னை யொழிய-
எண்ணில்முன்னம் பாரித்து தான்
என்னை முற்றப் பருகினான்
கார்ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே
என்பது பாசுரம்.

அதனால்தான் இறைவனை அமுதமாக நினைத்த திருப் பாணாழ்வாரையும், ஆண்டாளையும், நம்மாழ்வாரையும் தான் விரும்பி ஏற்றுக்கொண்டான். பக்தர்களை சேதனன் என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். சேதன லாபம் ஈஸ்வரனுக்கு என்பதால் ஒவ்வொரு பக்தனையும் (அஹமன்ன அஹமன்ன அஹமன்னாதா) எம்பெருமான் உண்ணுகின்றான் . என்று உபநிஷத வாக்கியம் சொல்லுகின்றது.

அன்னம் என்பதற்கு அமிர்தம் என்று பொருள் உண்டு.
எனவே பக்தர்களுக்கு இறைவன்
அமுதம் என்றால் இறைவனுக்கு பக்தர்கள் அமிர்தம் என்பதால் பக்தாமிர்தம் என்ற சொல் பக்தனே அமிர்தம் என்ற பொருளில் வருகிறது.

3. திருவாய்மொழி அமிர்தம்

இனி பக்தராகிய ஆழ்வாரும், பக்தர்களாகிய ஆழ்வாரின் அடியார்களும், இறைவனும் ஒரு சேர விரும்பிய ஒரு அமிர்தம் இருக் கிறது என்று சொன்னால் அதுதான் திருவாய்மொழி. இந்தத் திருவாய்மொழியை தொண்டருக்கு அமுதுண்ட சொன்னேன் என்று நம்மாழ்வாரே குறிப்பிடுவதால்ஆழ்வார் திருவாய் மொழியை அமிர்தமாக நினைக்கிறார்.

பகவான் இந்தத் திருவாய்மொழி கேட்பதற்காகவே நம்மாழ் வாரை படைத்து அவர் வாய்மொழி மூலமாக தமிழ் வேதத்தைக் கொடுத்தான் என்பதால் இறைவன் விரும்பிய அமுதமாக திருவாய்மொழி விளங்குகிறது. நம்மாழ்வாரின் அடியார்களான பக்தர்களுக்கும் திருவாய்மொழி இனிமையைத் தருகிறது என்பதால் பக்தர்களுக்கும் திருவாய் மொழி அமிர்தமாக இருக்கிறது. அதனால்தான் மதுரகவி ஆழ்வார், எனக்கு பகவானுடைய திருநாமத்தைச் சொல்லுவதை விட, பகவானுடைய கீர்த் தனையைத் திருவாய்மொழியாகப் பாடிய நம்மாழ்வாரின் திருநாமம் அமுதமாக இருக்கிறது என்று சொன்னார். (தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே).அதனால் திருவாய்மொழியின் இன்னிசையை பாடித் திரிவனே என்றார்.

அந்தத் திருவாய்மொழி இன்றைய வரையில் பக்தர்களால் சேவிக்கப்படுவதால் பக்தாமிர்தம் என்று அழைத்தார் நாதமுனிகள்.எனவே “பக்தாமிர்தம்” என்பது இறைவனும், ஆழ்வாரும், நாத முனிகளும், அவருக்குப் பின்வந்த ஆசாரியர்களும், ஆச் சாரியர்கள் வழித் தொடரும் பக்தர்களும், விரும்பும் திருவாய் மொழியே ஆகும் என்பது இதிலிருந்து தேறுகிறது.

முனைவர் ஸ்ரீராம்

 

The post தொண்டர்க்கு அமுதம் appeared first on Dinakaran.

Read Entire Article