
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த 4 மணி நேரத்தில் மட்டும் 13.2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூரு வெள்ளக்காடானது. நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. சுரங்க பாதைகளில் 5 அடி உயரத்திற்கு நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். சாய் லே-அவுட் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அந்த பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' பெங்களூரு உள்பட 23 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். சில நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த வாரம் முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, மண்டியா, மைசூரு, ஹாசன், குடகு, பெலகாவி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.தென்கிழக்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாநிலங்களில் மழை தீவிரம் அடையும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.