தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி

4 months ago 11

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின்கள், கடல் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா பகுதியில், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் பாலூட்டி இனமான ஆவுளியா எனப்படும் கடல் பசு, மருந்து மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது. இதனால் வேகமாக அழிய தொடங்கிய இந்த இனத்தை பாதுகாக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடற்கரை ஓரங்களில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், வனத்துறை மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், தற்போது இப்பகுதியில் கடல் பசு வேட்டையாடுவது வெகுவாக குறைந்து விட்டது. மேலும் இவை வேட்டையாடுவதை தடுக்க மீனவர்களும் பெரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அதேபோன்று டால்பின்களை, பெரும்பாலும் யாரும் வேட்டையாடுவதில்லை. இருப்பினும் பெரிய படகுகளில் அடிபட்டு சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், படகுகளில் செல்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வால் இதுபோன்ற சம்பவங்களும் குறைந்து விட்டன. இதுகுறித்து கீழக்கரை வனச்சரகர் ராஜேஷ் குமார் கூறுகையில், ‘‘டால்பின், கடல்பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை இனங்கள், கடல் தாவரங்கள், கடல்பாசி உள்ளிட்ட உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத 3,600க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், அரிய வகை பவளப்பாறைகள் இப்பகுதியில் உள்ளன. ஆழமான இக்கடல் பகுதியில் ஆக்ரோஷமாக பேரலைகள் எழுந்தாலும் கூட பவளப்பாறைகள் எவ்வித ஆபத்தும் இல்லாமல் மீனவர்களுக்கு நண்பர்களாக உதவுகிறது.

இப்பகுதியிலுள்ள தீவுகளில் உப்புத்தன்மை காணப்பட்டாலும், சில தீவுகளில் சுவையான குடிநீர் கிடைக்கிறது.மேலும் வேம்பு, குட்டை வடிவிலான பனை மரங்கள், தென்னை மரங்கள், பூவரசு, கல்வடோர பெர்சிகா எனும் வகையை சேர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. தீவைச் சுற்றி ஆழமான பகுதி என்பதால், குளிர் காலங்களில் டால்பின்கள் குதித்து விளையாடுவது ரம்மியமான காட்சியாக இருக்கிறது. கடல் பசுக்கள் வேட்டையாடப்படுவது இப்பகுதியில் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இந்த கடல் வாழ் உயிரினம் குறித்து நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே போன்று டால்பின் உயிரிழப்பும் இப்பகுதியில் குறைந்துள்ளது. தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்த அரியவகை உயிரினங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது’’ என்றார்.

The post தொடர் நடவடிக்கைகளால் கடல் பசு, டால்பின்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article