இஸ்ரேல்: இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 8-வது நாளாக நடைபெறுகிறது. இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது. மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளாக விளங்கி வரும் இந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் ஈரானில் இதுவரை 600க்கும் பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300-க்கு அதிகமானோர் காயமடைந்த தாகவும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
மறுபுறம் ஈரான் கொடுத்து வரும் பதிலடியில் இஸ்ரேலில் நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர். உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இந்த தாக்குதல்கள் 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில் குடியிருப்பு பகுதிகளில் சேதத்தை அதிகம் ஏற்படுத்தும் வகையில், ஏவுகணைகளுக்குள் சிறிய ரக குண்டுகளை வைத்து குண்டுமழையை ஈரான் பொழிந்துள்ளது.
கடந்த ஒருவாரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இத்தகைய கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது. எனினும், இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்காவும் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post தொடர் ஏவுகணை தாக்குதல்கள்: இஸ்ரேல் மீது குண்டுமழை பொழியும் ஈரான்..! appeared first on Dinakaran.