தொடரும் சோகம்.. ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு

16 hours ago 5

ஆமதாபாத்,

ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அவசர கால அழைப்பை விடுத்த விமானி, அந்த விமானத்தை விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார்.

அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அந்த பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து, வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர்.

பலியான பலரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

இதேபோல் மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் ஜே.பி. மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோர் நேற்று முன்தினமே ஆமதாபாத் சென்றனர். அவர்கள் அங்கு மீட்பு பணியை பார்வையிட்டனர். பிரதமர் மோடியும், குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்தர் படேலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார்.

 

இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று ஆமதாபாத் சென்றார். அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது அவருக்கு மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு, குஜராத் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விளக்கி கூறினர்.

இதையடுத்து ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுவரும் விஸ்வாஸ் குமார் ரமேசை பார்த்து ஆறுதல் கூறினார். அவரும் பிரதமரிடம் தான் உயிர் தப்பியது குறித்து கூறினார். அதை பிரதமர் உன்னிப்பாக கேட்டார். இதன் பிறகு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

 

பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குஜ்செயில் அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மாநில மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

முன்னதாக விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய்ரூபானி இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, விஜய்ரூபானியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கருப்பு பெட்டி

இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியையும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். விமானம் விழுந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டியை பாதுகாப்பு படையினர் நேற்று மீட்டனர்.

 

இதில் பதிவாகி உள்ள விவரங்களை ஆய்வு செய்தால்தான், விமானத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்ற விவரம் தெரியவரும். அப்போதுதான் விபத்துக்கான காரணமும் தெளிவாகும் என்று கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. உள்ளூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும், பிற மத்திய நிறுவனங்களும் விசாரணையில் இறங்கி உள்ளது.

Read Entire Article