
"அமெரிக்காதான் முதலில்" என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களுக்கு பிறப்புரிமை அடிப்படையில் அளிக்கப்படும் குடியேற்ற உரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவது போன்ற அவருடைய நடவடிக்கைகள் அங்குள்ள இந்தியர்களையும் ஆட்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அண்டை நாடான கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார். பின்னர் அதனை ஒரு மாதத்திற்கு மட்டும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட இந்த கூடுதல் வரி விதிப்பு கடந்த 3-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் நான்கே நாட்களில் மீண்டும் 2-வது முறையாக டிரம்ப், இந்த கூடுதல் வரி விதிப்பை ஏப்ரல் 2-ந் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அதனால் கனடாவும், மெக்சிகோவும் பெருமூச்சு விட்டுள்ளன. அதேவேளையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் வரி விதித்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. இதற்கு சீனாவோ வர்த்தக போரை நீங்கள் விரும்பினால், அதற்கு நாங்களும் தயார் என்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் ஒரு வர்த்தக போர் தொடங்கிவிட்டது என்றே உலகம் கருதுகிறது.
வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே அமெரிக்க பங்கு சந்தையில் பங்குகள் விலை பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வரிவிதிப்பால் அமெரிக்க மக்கள் பல பொருட்களுக்கு கூடுதல் விலையை கொடுக்கவேண்டியது இருக்கும் என்று அங்குள்ள புகழ்பெற்ற பத்திரிகையான 'வால் ஸ்டிரீட் ஜர்னல் மூடிஸ்' நிறுவன ஆய்வுகளை மேற்கோள் காட்டி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஷூக்கள் விலை, இனி 4 சதவீதம் அதிகரிக்கும். அது போல சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை பதிலடியாக அறிவித்துள்ளது. அதனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு அந்த நாட்டு மக்களும் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ?, அதே வரியை அமெரிக்காவும், இந்திய பொருட்களுக்கு இனி விதிக்கும். கடந்த ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சராசரியாக 11 சதவீதம் வரியும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சராசரியாக 3 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டது. இப்போது டிரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று சொன்னாலும் அமெரிக்காவுக்கு சென்று இருந்த வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தலைமையிலான குழு நடத்திமுடித்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையினால் வரி மற்றும் வரி இல்லாத தடைகளுக்கு சுமுக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வித்தியாசம் பல பொருட்களுக்கு வேறு வேறு விதமாக இருக்கிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே "0 பார் 0'' அதாவது இரு நாடுகளுக்கும் இடையே வரியில்லாத வர்த்தகமே சிறந்தது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.