தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2 months ago 10

இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த மாதம் 5-ந்தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகளுக்கும், முன்னாள் முதல்-மந்திரிகளுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று, கடந்த 22-ந்தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தங்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான தொகுதி மறுசீரமைப்பு குறித்த குறிப்பாணையை கொடுக்க விரும்புகிறேன்.

மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் 'நியாயமான தொகுதி மறுசீரமைப்பு' குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் (JAC) கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும்.

எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள், அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் கவலைகளை உள்ளடக்கியது.

இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக குறிப்பாணையை முறையாக சமர்ப்பிக்க உங்களை சந்திக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



 

Read Entire Article