
சென்னை,
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தொகுதி மறுவரையறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குழப்பமான பதில் அளித்துள்ளார். வட மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைத்து தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகம் கொடுத்தாலும் அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கினாலும் எங்களுக்கு அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை என அமித்ஷா கூறியுள்ளது குழப்புகிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
மக்கள் தொகையைக் குறைக்கச் சொன்னது யார்? மத்திய அரசு. அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டதற்காக எங்களுக்கு தண்டனையா? அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்காத மாநிலங்கள் எல்லாம் முன்னேறிய மாநிலங்கள் என சொல்லிவிட முடியுமா? முடியாது. ஆனால், நாங்கள் முன்னேறியுள்ளோம்" என்று அவர் கூறினார்.