தேர்தலை எப்படி சந்திக்கப் போறோம் திக்குத் தெரியாத காட்டில் தவிக்கும் இலைக்கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 months ago 9

‘‘தென் மாவட்ட இலைக்கட்சிக்காரங்க திக்குமுக்காடிட்டிருக்காங்களாமே…’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்குது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கிட்டாங்க. ஆனா, இலைக்கட்சியினர் திக்குத் தெரியாத காட்டில் இருப்பதுபோல உணர்கின்றனராம். ஏற்கனவே 10 தோல்வி பழனிசாமி என எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலித்து வரும் நிலையில், சிதறு தேங்காய் போல இலைக்கட்சியில் தேர்தலை எப்படி சந்திப்பது என தென்மாவட்டங்களில் பட்டிமன்றமே நடக்கிறதாம். சேலம் காரர், தேனிக்காரர், குக்கர் காரர், சின்ன மம்மி என கட்சி பிளவு பட்டு விட்ட நிலையில், தற்போது செங்கோட்டையாரும் ‘கழகத்தை’ கட்டிக் காக்க களம் இறங்கியுள்ளாராம். சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் கமிஷன் வேறு விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் எப்படி தேர்தலை சந்திக்கப் போறோம் என்பதுதான் அல்வா, முத்து மாவட்ட இலைக் கட்சியினருக்கு பெரும் கவலையாம். இதனால் பல தொகுதிகளை குறி வைத்து களம் காண காத்திருந்த இலைக் கட்சியினர் கூட பேக்அப் ஆகிறார்களாம். கடந்த மக்களவைத் தேர்தலில் இப்படித்தான் தேர்தலில் நிற்க யோசித்ததால், பசையுள்ளவர்களுக்கு சீட்களை வாரி வழங்கினாராம் சேலம் காரர். அதில் ஒருவருக்கு கூட வெற்றி கிடைக்கவில்லை, முட்டை தான் மிச்சம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் தென் மாவட்ட இலை கட்சித் தொண்டர்களின் கவலை ரேகையாம்’’ என்று விலாவாரியாக விளக்கினார் விக்கியானந்தா.‘‘மைக் நடிகர் பெயர் கொண்டவரை எடப்பாடி ஆதரவு மாஜி ஓரங்கட்டிட்டாராமே…’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கள்ளச்சாராய பலி பரபரப்பு நடந்த குறிச்சி பெயர் கொண்ட மாவட்டத்தில், இலைக் கட்சியின் மாஜி அமைச்சரான மைக் நடிகர் பெயர் கொண்டவர் கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தாராம். தெற்கு, வடக்கு என பகுதிகளாக பிரித்த பிறகு மாஜி எம்எல்ஏவான குரு பெயர் கொண்டவர், மாஜி அமைச்சரை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியதால் வெகுநாட்களாக உள்கட்சி பூசல் நீடிக்கிறதாம். சமீபத்தில நடந்த மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இது எதிரொலித்ததாம்.அதாவது கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக மாஜி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடியின் செல்வாக்குடன் உள்ள குரு குமாரரோ, நோட்டீஸ்கூட அச்சிடாமல் பப்ளிசிட்டியை குறைத்து விட்டாராம். இதனால் கூட்டமே சைலண்ட்டா நடந்து முடிந்ததாம். எடப்பாடியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி மாஜி அமைச்சரை ஓரங்கட்டுவதிலேயே குரு தரப்பு குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருவதால் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் குழப்பத்துடன் புலம்பி வருகிறதாம் மோகனமான மைக் நடிகர் தரப்பு. இதன் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் இலைகட்சியில் எதிரொலிக்கலாம்’’ என்று கூறி புன்னகைத்தார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரின் மாஜியான உதயமானவருக்கு இது சோதனைக் காலம் போல…’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.‘‘உதயமானவரு பருப்பு இனி வேகாதுன்னு கட்சிக்காரங்க வெளிப்படையாவே பேசுறாங்களாமே?’’ என்று அடுத்த கேள்வியை போட்டார் பீட்டர்மாமா.‘‘கோட்டையாரை காலையிலதான் உதயமானவரு வசைபாடியிருக்காரு, அவரே நேரடியாக அழைப்பில் வந்து வெளுத்து வாங்கி விட்டாராம். வேறு வழியின்றி, மாலையில் மறுப்புச் சொல்லி மூக்குடைந்திருக்கிறார். அத்தோடு இல்லாமல், ‘தலைவர், தலைவியின் மறு உருவாக அன்று தோழி, இன்று சேலத்துக்காரர், நாளை யாரோ? என்ன விளையாட்டிது?’ என்று உதயமானவருக்கு எதிராக தேனிகாரரின் வாரிசு வம்புக்கு இழுத்து, வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தருவதாக கூறிக்கொண்டு, மைக்கை நீட்டிய செய்தியாளர்களிடம் ஏகத்துக்கும் கடுப்பான மாஜி, ‘அப்பாவும் மகனும் பலாப்பழத்தில் நின்னுட்டு என்னைப் பற்றி பேசலாமா?’ என பொங்கி வழிந்தார். ஆனாலும், காரியம் ஆகவேண்டுமானால், யாரையும் புகழ் பாடியும், அவர்கள் அசந்தால் ஒரே அடியாக தூக்கிப் போடுவதிலும் கை தேர்ந்தவர் இந்த பதிவுக்கெல்லாம் பதட்டப்பட மாட்டார் என்று கட்சிக்காரர்களே பிறர் காதுபட பேசிக் கொள்கின்றனர்.

இத்தோடு உதயமானவர், தற்போது புதிதாக தொடங்கி இருக்கும் திண்ணை பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லையாம். மேலும், திரைத்துறையில் சொந்த சகோதரருக்கென தன் அரசியல் பலத்தில் சேர்த்ததில் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார் எனும் பேச்சும் கட்சியினரிடம் ஓங்கி ஒலிக்கிறது. கையில் கிடைத்த ஆயுதமாக கட்சிப்பிரசாரத்தில் கரண்டி பிடித்துக் கொண்டு புரோட்டா போட்டு போஸ் கொடுத்தாலும், ‘மெல்ல உன் உருட்டு வெளியே வரத்துவங்கி விட்டது.. இனி உங்க பருப்பு வேகாதுபா..’ என உதயமானவரின் காதுபடவே, தூங்கா நகர் காரர்கள் பேசி மிரள வைத்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவர் மாவட்டத்துல காவல்துறை உதவியை நாடப்போறாங்களாமே?’’

‘‘இலைக்கட்சி தலைவரின் புறநகர் மாவட்டத்துல, பிரபலமான ஈஸ்வரன் கோயில் இருக்குதாம். இந்த பகுதியை சேர்ந்த இலைக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், திடீரென மரணமடைந்து விட்டாராம். இலைக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, ரேஷன் கடையில் பல்வேறு வேலைகளை வாங்கி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் பல லட்சங்களை பெற்றதாக சொல்றாங்க.. அதுவும் முக்கியமான நிர்வாகி ஒருவரின் பெயரைச்சொல்லியே, பணத்தை வசூலித்ததாங்களாம். அந்த பெயரை கேட்டதும், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என நம்பியவர்கள் பல லகரங்களை கொடுத்திருக்காங்க… பணம் கொடுத்தவர்களிடமெல்லாம் வாங்கிய பணத்தை, அந்த முக்கிய புள்ளியிடம் கொடுத்து விட்டேன் என கூறினாராம். இவரும், எந்நேரமும் அந்த முக்கிய புள்ளியின் தளபதியாகவே செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், எப்போது அவருடனேயே இருப்பாராம்.

இதனை நம்பியே ஏராளமானோர் பணத்தை கொடுத்திருக்காங்க.. ஆனா.. வேலையும் கிடைக்கல.. ஆட்சியும் போனதால பணம் கொடுத்தவங்க பணத்தை ரிட்டன் கேட்டு சிவனூருக்கு படையெடுத்திருக்காங்க…ஆனால் பணத்தை யாரிடம் கேட்பது என்று தெரியலையாம்.. எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த முக்கிய புள்ளியை சென்று சந்தித்து பேசலாம் என முடிவு செஞ்சிருக்காங்களாம்.. இந்த விவகாரத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்னதோடு மட்டுமல்லாமல், யாரும் என்னை பார்க்க வரகூடாதுன்னும் அந்த முக்கிய புள்ளி சொல்லிட்டாராம். அப்படியா விவகாரம் என யோசிச்ச பணம் கொடுத்தவர்கள், காவல்துறை உதவியை நாடினால் நல்லது நடக்குமுன்னு இருக்காங்களாம்.. விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்குமுன்னு இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க…’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

The post தேர்தலை எப்படி சந்திக்கப் போறோம் திக்குத் தெரியாத காட்டில் தவிக்கும் இலைக்கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article