தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை; புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

6 months ago 12

சென்னை: புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் 2017-18ம் ஆண்டில் 26 மாணவர்களுக்கான சேர்க்கையில் தேசிய மருத்துவ கவுன்சில் விதிப்படி நடைபெறாததால் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மருத்துவ கவுன்சில் சார்பில் புதுச்சேரி மருத்துவ கல்லூரி அடுத்த 2 ஆண்டுகளுக்கு சேர்க்கை நடத்த தடை விதிக்க மருத்துவ குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2025-26 மற்றும் 2026-27 கல்வியாண்டில் வருடத்திற்கு 13 இடங்கள் என்று 26 நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த அரசுக்கு இடங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்றுக்கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, படிப்பை முடித்த 26 மாணவர்களுக்கான நிறைவு சான்றிதழை மருத்துவ கவுன்சில் உடனே வழங்க வேண்டும். கல்லூரி உத்தரவாதத்தின்படி 26 இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும். தரமணி சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சமும் 2 வாரத்தில் புதுச்சேரி மருத்துவ கல்லூரி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை; புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article