டெல்லி: தேச பாதுகாப்பை மோடி அரசு ஆபத்தில் ஆழ்த்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சீனாக்கு இந்தியாவின் கோபத்தை கட்டுவதற்கு பதிலாக சிவப்பு கம்பள வரவேற்பை மோடி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களில் குடியேற்றத்தை தொடங்கியுள்ளதாகவும், இது போன்று எல்லையில் 628 கிராமங்களில் சீனர்கள் குடியேற்று உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துடிபான கிராமங்கள் திட்டத்தை எல்லை பகுதிகளில் ஊக்குவிப்பதாக நாடாளுமன்றத்தில் மோடி மிகைப்படுத்தி பேசியதாகவும், உண்மையில் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 90% நிதி கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்பட வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடியில் ரூ.509 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக கார்கே தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்கள் மேம்படுத்தவேண்டிய நிலையில், அதற்கு எந்த நிதியும் வழங்கப்பட வில்லை என அவர் கூறியுள்ளார். பிரமபுத்ரா நதியின் குறுக்கே உலகின் மிக பெரிய அணையை கட்ட போவதாக கடந்த டிசம்பர் மாதம் சீனா அறிவித்த பின்னும் ஒன்றிய அரசு அமைதி காப்பது ஏன்? என அவர் வினவி உள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கும், சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வடகிழக்கு மாநிலங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் திட்டம் என கார்கே எச்சரித்துள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றும் ஆனால் அவற்றை மோடி அரசோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். பாஜக அரசின் முன்னுரிமை தேசப் பாதுகாப்பு அல்ல என கார்கே தெரிவித்துள்ளார்.
The post தேச பாதுகாப்பை மோடி அரசு ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.