தென்காசி: தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மேலும் ஒருவர் பலியானார். தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தை செங்கோட்டையை சேர்ந்த ராஜதுரை என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 முதியோர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள். இவர்களுக்கு நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட பலருக்கும் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் (60), செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மேலும் 8 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று மூதாட்டி தனலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட காவல்துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சமையல் அறையில் உள்ள உணவு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!! appeared first on Dinakaran.