
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8ம்தேதி கில்பர்ட் வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.