தூத்துக்குடியில் ஜூலை மாதம் உற்பத்தி துவக்கம்; வின்பாஸ்ட் வி7, வி6 மின்சார கார்கள் முன்பதிவு தொடங்கியது

1 day ago 5


சென்னை: தூத்துக்குடி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள வின்பாஸ்டின் வி7, வி6 மின்சார கார்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து மின்சார கார் உற்பத்தியை தொடங்க வின்பாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், பேட்டரி உற்பத்தியையும் தொடங்கி இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைத்து உள்நாட்டு சந்தையை பிடிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரி கார்கள் இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது பேட்டரி கார்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இரு சீன கார்களுக்கு இந்த வின்பாஸ்ட் நிறுவனம் போட்டியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வி6, வி7 வகை மின்சார கார்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்கான உற்பத்தி வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என வின்பாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post தூத்துக்குடியில் ஜூலை மாதம் உற்பத்தி துவக்கம்; வின்பாஸ்ட் வி7, வி6 மின்சார கார்கள் முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article