
வடக்கு கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை நிலவுகின்றன. இதனால் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடித் தடைகாலம் அமலில் இருப்பதால், நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். மேலும் விசைப்படகு மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) முடிவடைகிறது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) என்பதால், மீண்டும் 16ம்தேதி முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.