
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அயிரவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்ற எம்.சி. முருகேச பாண்டியன். தி.மு.க. பிரமுகரான இவர் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறாா். இவர் ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகையாவின் அண்ணன்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சண்முகையா ஒரு அணியாகவும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையராஜா ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள். ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் பெற இளையராஜா முயற்சி செய்கிறார்.
இந்த நிலையில் இளையராஜாவின் அத்தை மாடத்தி (வயது 38) பெயரிலிருக்கும் சிலோன்காலனி பகுதியில் உள்ள நிலத்தை தன்னிடம் தருமாறு முருகேச பாண்டியன் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். நேற்று இளையராஜாவின் அத்தை மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது முத்தையாபுரம் அருகே காரில் சென்று வழிமறித்த முருகேச பாண்டியன் சிலோன்காலனி நிலத்தைக் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாடத்தி முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேச பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.