
சென்னை,
முன்னதாக, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது.
மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார்; அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் அண்மையில் அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.
மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன். மல்லை சத்யா மீதான அதிருப்தியில் திமுக பின்னணியில் இருப்பதாக கூற முடியாது; அதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் மல்லை சத்யா கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வைகோவும் பேசியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
ஏற்கனவே, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், தற்போது, அந்த மோதல் அதிகரித்துள்ளது. வைகோ பேசியிருக்கும் கருத்துகள் குறித்து பதிலளித்த மல்லை சத்யா, வைகோ சொன்ன வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாது வேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார் என்று கூறியிருக்கிறார்.