
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம், டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தது. இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் துருக்கியில் இருந்து தயாரானவை என்பதும் தெரியவந்தது.
இதனால் இந்தியாவில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலைங்களில் செய்யப்பட்டு வந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இண்டிகோ நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இண்டிகோ இரண்டு போயிங் 777-300 இஆர் விமானங்களை துருக்கி ஏர்லைன்ஸிடம் இருந்து குத்தகைக்கு பெற்று இயக்கி வருகிறது. 31-ஆம் தேதி வரை இந்த குத்தகைக்கான அவகாசம் உள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு இண்டிகோ நிறுவனம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது. இருப்பினும், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்கு மட்டுமே தற்காலிக நீட்டிப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது.