கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வெகுண்டு எழுந்த இந்தியா, பாகிஸ்தான் நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அட்டாரி-வாகா எல்லையை மூடியது. முப்படைகளை தயார் நிலையில் நிறுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பத்து நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் மொத்தம் 9 தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் கொதித்து போன பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பொதுமக்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகள் உயிரை பறித்தது. இதற்கு பதிலடியாக கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றன. சீனா, துருக்கி போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. இந்நிலையில் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தையால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இல்லவே இல்லை, அமெரிக்காவின் மத்தியஸ்தம் தான் பாகிஸ்தான்-இந்தியா போர் நிறுத்தத்துக்கு காரணம் என்றும் மோதலை நிறுத்தினால் அமெரிக்காவுடன் அதிக வர்த்தகம் செய்யலாம் என்று கூறினேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்.
இதற்கிடையில், சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டுக்கு ரூ.8700 கோடி கடனுதவியைய சர்வதேச நிதியம் வழங்கியுள்ளதால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் துருக்கி அதிபர் எர்டோகன் தனது எக்ஸ் தளத்தில், வாழ்க துருக்கி-பாகிஸ்தான் நட்பு என்று பதிவிட்டுள்ளது இந்தியாவை எரிச்சலடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடை அந்நாடு அறிவித்துள்ளது. இதன் மூலம் தீவிரவாதி மசூத் அசார் குடும்பத்தில் உயிரிழந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.14 கோடி கிடைக்கும். மேலும் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் சீரமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா தாக்கி அழித்தது. இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பயங்கரவாதிகளை பொதுமக்கள் பட்டியலில் சேர்த்து இழப்பீடு வழங்குவதும், அவர்களது கட்டிடத்தை சீரமைத்து தருவதும் மீண்டும் அங்கு தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட வழிவகுக்கும் என்று இந்தியா கண்டனம் ெதரிவித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டாலும் தீவிரவாதிகளின் துப்பாக்கி சத்தம் ஓயாது ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை இரு நாடுகளுமே மறுக்க முடியாது.
The post துப்பாக்கி சத்தம் ஓயாது appeared first on Dinakaran.