
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர், ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பெண் அதிகாரிகளின் நடவடிக்கையை புகழ்ந்து பேசினார்.
பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றும்போது, பஹல்காமில் பயங்கரவாதிகள் நம்முடைய கலாசாரம் மீது தாக்குதல் நடத்தினர். நம்முடைய சமூகம் பிளவுப்பட வேண்டும் என முயற்சித்தனர். அவர்கள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர். அந்த சவாலை பயங்கரவாதிகளுக்கான கெட்ட கனவாக பெண்கள் மாற்றி விட்டனர் என பேசியுள்ளார்.
பயங்கரவாதிகளின் எல்லைக்குள்ளேயே இனி நாம் சென்று தாக்குதல் நடத்துவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும் அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது இன்று, இந்தியாவின் பெண் சக்திக்கான அடையாளம் ஆகியுள்ளது. நீங்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டால், பதிலுக்கு வெடிகுண்டுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நம்முடைய மகள்கள் ஜம்முவில் தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை என முன்னணியில் நின்று துணிச்சலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லை கடந்த தாக்குதலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுத்தனர். உத்தரவு பிறப்பித்தல், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செயல்படுதல் முதல் எதிரி நிலைகளை அழித்தல் என நம்முடைய தைரியம் வாய்ந்த மகள்கள் தனித்துவத்துடனான தீரத்துடன் செயல்பட்டனர் என புகழ்ந்து பேசியுள்ளார்.