நியூயார்க் : ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பாலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் நாடு பாலஸ்தீன நாட்டின் காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கிருந்த மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அண்மையில் வெளியான தகவலின்படி, உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால், பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காஸாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர்,தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். காஸாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களுக்கும் அகதிகள் முகாமிலும் வாழ்வதை பார்க்க முடியவில்லை என்றும் கவலையை வெளிப்படுத்தினார்.
The post தீப்பிழம்பு, குண்டுவெடிப்பு, பட்டினி.. காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை : ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பாலஸ்தீனிய தூதர்!! appeared first on Dinakaran.