*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில், ரூ.1.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 16ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் பயன்பெறவும், பொருளாதார மேம்பாடு அடையவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். குறிப்பாக, பிற மாநிலங்களுக்கு முன்னோடியான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்காக புறவழிச்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஆன்மிக சுற்றுலா பயணிகளின் வருகையால் திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. அவர்களுக்கு ேதவையான வசதிகளை செய்து தருவது நமது கடமையாகும்.
முதல்வரின் சிறப்பான திட்டங்களால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாக அரசின் திட்டங்களால் பயன்பெற்றுள்ளன. வேளாண் துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வேளாண் துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 361 நபர்களுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் வழங்கினார்.
மேலும், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை நடந்த ஜமாபந்தி நிகழ்வில், பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, மின் இணைப்பு, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 813 மனுக்களில், 361 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 452 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆர்டிஓ ராஜ்குமார், தாசில்தார் மோகனராமன், மூத்தோர் தடகளச்சங்க மாநில துணைத்தலைவர் கார்த்தி வேல்மாறன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவண்ணாமலையில் ஜமாபந்தி நிறைவு ரூ.1.58 கோடியில் 361 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.