
சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனமும் செய்யப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. இன்று காலையில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 10.05 மணி அளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க சாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பக்தர்கள் மத்தியில் நடனமாடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். மாட வீதியின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.