
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 60) மற்றும் திருப்பூர் அனைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (34) ஆகியோர் இணைந்து மங்கலம் அருகே உள்ள பூமலூர் பகுதியில் தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பனியன் கழிவுகளை பஞ்சாக அரைக்கும் மில் வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 6 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது பனியன் கழிவுகளை பஞ்சாக அரைக்கும் எந்திரத்தில் தீ ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் எந்திரங்கள் நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது பரபரப்பை ஏற்படுத்தியது.