
திருப்பூர்,
திருப்பூர் மாநகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக குப்பாண்டம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது சுமார் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில், போலீசார் நடத்திய சோதனையின்போது ஒரு அறையில் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர் மற்றும் ரவி ராஜா ஆகிய 2 இளைஞர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பீகாரில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கி வந்து தமிழ்நாட்டில் அந்த துப்பாக்கிகளை ரூ.50,000 வரை விலை பேசி விற்பனை செய்ய இருந்தது அம்பலமாகியுள்ளது. அவர்கள் யாரிடம் துப்பாக்கிகளை விற்பனை செய்ய இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.