
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் நிகிதா(வயது 41). இவருடைய தாயார் சிவகாமி (76). இருவரும் கடந்த 28ம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாாிடம் (28), தனது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சாவியை கொடுத்துள்ளனர். காரை அப்பகுதியில் நிறுத்தியுள்ளனர்.
பின்னர், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நிகிதா கார் சாவியை வாங்கி கார் கதவை திறந்துள்ளார். அப்போது, காரில் இருந்த 9½ சவரன் நகையை காணவில்லை என நிகிதா கூறினார்.
இதுகுறித்து நிகிதா, காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார். இதை தொடர்ந்து நிக்தா போலீசில் புகார் அளித்தார். உகார் தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் காவலாளி அஜித்குமாரை விசாரித்தனர். நிகிதா அளித்த புகார் தொடர்பாக போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது பண மோசடி வழக்கு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது 2011ம் ஆண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010ல் துணை முதல் அமைச்சர் உதவியாளரை தனக்கு தெரியும் என கூறி நிகிதா பண மோசடி செய்துள்ளார்.
பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக நிகிதா மீதும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.