மதுரை: திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக ஆட்சியர் சங்கீதா நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் (பொ) தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அதில் அதிமுக பிரதிநிதி மட்டும் கையொப்பமிட மறுத்து சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆட்சியரின் இந்த அறிக்கைக்கு அதிமுக மதுரை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.