மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத பாகுபாட்டை யாரிடமும் காட்ட விரும்பவில்லை. அரசு நல்லிணக்கத்தையே விரும்புகிறது என அரசுத் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் கூறப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சேனசுவாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோயில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ் – பிராமி எழுத்துக்கள், சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் மலை பாறையில் சுமார் ஒரு அடி உயரத்தில் 2 சமண அடையாளங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன் மற்றும் ெஜ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அரசு யாரிடமும் மத பாகுபாட்டை காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளோடு இந்த மனுவையும் சேர்த்து பட்டியலிடுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; நல்லிணக்கத்தையே விரும்புகிறோம்: மத பாகுபாட்டை விரும்பவில்லை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.