திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிடும் விவகாரம்; இருதரப்பினருக்கும் பாதகமில்லாமல் நடவடிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

4 months ago 14

திண்டிவனம், பிப். 7: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் அரசுக்கு இடையிலான மோதலால் உயர்கல்வி பாதிக்கக்கூடாது. துணைவேந்தர் இல்லாமல் பாதிப்பு ஏற்படுவதால் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கூறி துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என திமுக அரசு தெரிவித்துவரும் நிலையில், இதில் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லாதது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குபின் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான 4 வழிச்சாலைகள் அமைக்கப்படுவதும் அதில் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிப்பது சரியானது. ஆனால் முழு கட்டணம் வசூலித்த பிறகு சுங்க கட்டண கொள்ளையில் ஈடுபடக்கூடாது, சுங்கச் சாவடிகளை குறைக்க வேண்டும். போட்டி தேர்வுகள் மூலமாக சிறப்பு மருத்துவர்கள் நியமிக்காமல் நேர்காணல் மூலமாக தேர்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நேர்காணல் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டால் அது முறைகேட்டிற்குதான் வழிவகுக்கும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்தார். போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.ஆசிரியர்களை கடவுளாக நினைத்துதான் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். ஆசிரியர்கள் செய்த தவறை மன்னிக்க முடியாது.

அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆடு பலியிட பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ், 100 ஆண்டுகளாக இந்த பிரச்னை இருந்து வருகிறது. கடந்தாண்டு கடைபிடித்த நடவடிக்கையை இருதரப்பினரும் கடைபிடிக்கலாம். நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் பாதகமில்லாமல் இதற்கு தீர்வு காணவேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த திட்டமும் ஒதுக்கவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிடும் விவகாரம்; இருதரப்பினருக்கும் பாதகமில்லாமல் நடவடிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article