சென்னை: திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற 3000வது திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூர் அக்னிபுரீசுவரர் திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர். இந்த மகத்தான விழாவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; திமுக அரசு பொறுப்பேற்றபின் 3,000வது குடமுழுக்கு இன்று திருப்புகலூர் கோயிலில் நடைபெற்றுள்ளது. கோயில்களின் பராமரிப்பிற்கும் கோயில் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும் முதல்வர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார். திருப்பதியில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போன்றே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் ஆன்லைன் முன்பதிவு முறையில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி விரைவில் கொண்டு வரப்படும். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெறுவதாகவும் கூடிய விரைவில் முதல்வர் இதனை தொடக்கிவைப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
The post திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் 3 கோயில்களில் ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.