திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

3 weeks ago 7

திருமலை திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். சமீபத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை அடுத்து, மே மாத தொடக்கத்தில் பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைவாக இருந்தது.

ஆனால், 2-வது வாரத்தில் இருந்து பக்தர்கள் அதிகமாக வந்தனர். அதன் மூலம், 10 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், கடந்த 24-ந்தேதி 90 ஆயிரத்து 211 பக்தர்களும், 25-ந்தேதி 91 ஆயிரத்து 538 பக்தர்களும், 31-ந்தேதி 95 ஆயிரத்து 80 பக்தர்களும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு மே மாத எண்ணிக்கையை விட 55 ஆயிரம் அதிகம் ஆகும்.

அதேபோல் மே மாதத்தில் 3 நாட்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியும், 26-ந்தேதி ரூ.5.09 கோடியும் கிடைத்தது. ஆக மொத்தம் மே மாத உண்டியல் காணிக்கையாக ரூ.106.83 கோடி கிடைத்தது.

கோடைக்காலத்தை முன்னிட்டு சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் தேவஸ்தானம் சிபாரிசு வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களை ரத்து செய்தது. இதனால், ஏராளமான சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மே மாதத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 3 முறை கோவிலுக்கு வந்ததற்கு பின்னால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முயற்சிகள் தெளிவாகத் தெரிகிறது. ஏராளமான பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி உத்தரவின் பேரில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், விஜிலென்ஸ் பணியாளர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் ஆகியோர் வரிசையில் நின்று நிலைமையை கண்காணித்தனர். இதனால், எந்தவித மோதல்களோ, கூட்ட நெரிசலோ ஏற்படவில்லை.

தற்போது கோடை விடுமுறை முடிந்ததால், தேவஸ்தான அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும், என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான அதிகாரி ஷியாமளாராவ் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article