
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ராஜகோபுர பணிகள் முடிவடைந்துவிட்டன. விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8 ஆயிரம் சதுர அடியில் யாக சாலையும், 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது.
இந்த நிலையில், கும்பாபிஷே விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் நேரில் ஆய்வு செய்தார். கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம், கோவிலில் உள்ள விமான தளம், யாக சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.