
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 15 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி மூலவர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் வைத்து யாகசாலை பூஜை நடைபெறுகின்றன.
யாக சாலை பூஜைகளுக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணம் பூசி, வண்ண பேப்பர் ஒட்டி, சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் முருகனின் அறுபடை வீடுகள் சுவாமிகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. மேலும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் யாகசாலை முழுவதும் தங்க வர்ணத்தில் மிகவும் தரமான அட்டை ஒட்டப்பட்டுள்ளது.
யாகசாலையின் நடுவே பிரமாண்டமாக 5 அடி உயரத்தில் பஞ்ச ஆசன வேதிகை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆமை மீது 5 தலை நாகம் அமர்ந்திருப்பது போல், அதற்கு மேல் முனிவர்கள், நந்தி, சிங்கம், அலங்கார பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் தாமரைப்பூ அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யாகசாலையில் மயில், நந்தி, யானை உள்பட பல்வேறு அலங்கார உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்கிறது. நாளை மறுநாள் மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதன்பின்னர் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதன்பின்னர், காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.