டெல்லி : திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கும்பாபிஷேக நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12:05 மணி முதல் 12:45 மணி வரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் உச்ச நீதிமன்றதில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்திரம், “குடமுழுக்கு நேரத்தை முடிவு செய்ய மே 24ம் தேதி நடந்த கூட்டத்தில் மனுதாரர் கலந்துகொண்டார். அப்போது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை”, என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, குடமுழுக்கு நேரத்தை மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.