திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

5 hours ago 2

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக, தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தகவலின்படி எஸ்.ஐ. ஜீவமணி தர்மராஜ் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, முதல்நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டம், ஆலந்தலை ஊருக்கு வடபுறம் உள்ள கடற்கரை பகுதியில் இன்று (17.03.2025) அதிகாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கே இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட கட்டிங் செய்த பீடி இலைகள் 30 கிலோ எடை கொண்ட 33 மூட்டைகளும் (990 கிலோ), முழு பீடி இலைகள் 30 கிலோ எடை கொண்ட 49 மூட்டைகளும் (1470 கிலோ) என மொத்தம் 82 மூட்டைகள் (2,460 கிலோ) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரைக் கண்டவுடன் படகுடன் தப்பித்துச் சென்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Read Entire Article