
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுந்தரராஜ சுவாமியின் அவதார தினத்தையொட்டி மூன்று நாட்கள் விமரிசையாக விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு சுந்தரராஜ சுவாமி அவதார உற்சவம் நேற்று முன்தினம் (ஜூன் 17) தொடங்கியது. விழா நாட்களில் ஊஞ்சல் சேவை மற்றும் வாகன சேவை நடைபெறுகிறது.
முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாம் நாளான நேற்று அனுமந்த வாகனத்திலும் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் இறுதி நாளான இன்று கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இரவில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.