
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோவில் அருகே உள்ள மணிமுத்தாறு ஆற்றில் ஆண்டுதோறும் கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்சம் என்னும் விழா வைகாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அகஸ்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னனுக்கும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தர்வனுக்கும் விஷ்ணு பெருமாள் சாப விமோசனம் அருளினார். பெருமாள் யானையை காப்பாற்ற வந்ததால் கஜேந்திர வரதன் என்பது பெருமாள் திருநாமம் ஆனது. இப்புராண நிகழ்வை நினைவு கூறும் வகையில் திருக்கோஷ்டியூரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு கஜேந்திர மோட்ச விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோவில் யானை சொர்ணவள்ளி முன் செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் மணிமுத்தாறு ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மோட்ச தீபத்துக்கு தீப தூப ஆராதனை காண்பித்து பெருமாளின் சக்கரத்தை மோட்ச தீபத்தில் அர்ச்சகர்கள் ஆவாகனம் செய்து கஜேந்திர பூஜையை நடத்தினர்.
நிறைவாக ஆற்று தண்ணீரில் மோட்ச தீபத்தை வைத்து சொர்ணவள்ளி யானைக்கு பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது யானை தண்ணீர் பீய்ச்சி அடித்தது. நிறைவாக சௌமிய நாராயண பெருமாள் சுவாமியை, யானை சொர்ணவள்ளி மூன்று முறை சுற்றி வந்து மண்டியிட்டு வணங்கி வழிபட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுக்கும் மோட்சம் கிடைக்க வேண்டி வழிபாடு செய்தனர். இவ்விழாவில் கருவேல் குறிச்சி கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.