திராவிட மாடல் ஆட்சியில் திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

4 hours ago 3

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயில் குடமுழுக்கு ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெறும் பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல ரோப்கார் வசதிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பழநியில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதேபோல் அறங்காவலர் குழுவினர் ஆய்வின் அடிப்படையில், திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவித்து அர்ச்சகர் பெயர், அவரது கைபேசி எண்ணுடன் பலகைகள் அமைத்தது திராவிட மாடல் ஆட்சியில்தான். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே திராவிட மாடல் ஆட்சி நாயகனின் கொள்கை.

ஆகவே திருச்செந்தூரில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும். திமுக அரசு உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்திய போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கவில்லை. மதச்சார்புடைய எவ்வித அடையாளமும் இன்றி நடைபெற்றது. நாங்கள் வாகனம் ஏற்பாடு செய்து யாரையும் அழைக்கவில்லை, ரசீது புத்தகம் அச்சடித்து பணம் வசூலிக்கவில்லை. ரயிலில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்கவில்லை. எங்கள் மாநாட்டில் 27 நாடுகளில் இருந்து உண்மையான முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்து அறநிலையத்துறை சார்பில் நடந்த மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முழுக்க முழுக்க முருக பக்தர்களால் நடத்தப்பட்டது. இவர்களின் மாநாடு அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிட மாடல் ஆட்சியில் திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article