
சென்னை,
திமுக எம்.பி ஆ.ராசா இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
டெல்லி, மராட்டியம், அரியானா போல தமிழ்நாடு கிடையாது. தமிழ்நாடு திராவிட சித்தாந்த பின்னணி கொண்ட மாநிலம். இங்கு பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதை அமித்ஷா விரும்பவில்லை. சட்டம் , ஒழுங்கு தமிழகத்தில் அமைதியாக உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்காதபோது, மாநில அரசு நிதியில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் தனது பதவிக்கு உகந்தவாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். 98.5 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அமித்ஷாவை நான் அழைக்கிறேன். விவாதத்திற்கு நான் தயார்? அமித்ஷா தயாரா? தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதை அமித்ஷா விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைய முடியாது. எப்படிப்பட்ட கூட்டணி அமைத்தாலும் அதனை திமுக கூட்டணி வெல்லும். பாஜகவின் எந்தவித மத அரசியலும் பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திமுகவிற்கு அச்சப்பட்டுதான், தமிழ்நாட்டுக்கு வந்து அமித்ஷா பேசியுள்ளார். திமுகவை கண்டு பாஜகதான் அஞ்சுகிறது" என்றார்.