சென்னை: திமுக என்றும் மக்களின் உரிமைக்காக போராடும் என பரந்தாமன் எம்எல்ஏ பேட்டியில் தெரிவித்துள்ளார். வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள்,திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டபேரவை நிகழ்வுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ பரந்தாமன் கூறியதாவது: வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து அவற்றை திரும்ப பெற வேண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 27ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசு கவனத்திற்கு அனுப்பப்பட்டது. 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்தக்கூடாது, சரத்துகளை மாற்றுவது மூலம் ஒட்டுமொத்தமாக வக்பு சட்டத்தை ரத்து செய்வதற்கு, இல்லாமல் செய்வதற்கான வழிவகை தான் என முதல்வர் தெரிவித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் பலம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயகத்தின் குரல்வலைகளை நெரித்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மதிக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், திமுக எம்பிகள் ராசா, அப்துல்லா உறுப்பினர்களாக உள்ள கமிட்டியில் மேலும் பல எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்கள் கொண்டு வர முன்வராத கமிட்டி, எதிர்ப்பு கருத்து உடையவர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.
ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர், ஆனால் எதிர் கருத்து உள்ளவர்கள் இடைநீக்கம் செய்த முதல் முறையாக வரலாற்று பிழையை பாஜக செய்துள்ளது. 232 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், 288 பேர் ஆதரவு தெரிவித்ததால் சட்ட திருத்தம் நிறைவெற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக என்றும் மக்களின் உரிமைக்காக போராடும் சிறுபான்மையின மக்கள் பக்கம் நிற்கும், காயிதே மில்லத் காலம் முதல் தற்போது வரை, இனி எதிர்காலம் வரை என்றென்றும் சிறுபான்மை மக்கள் பக்கம் நிற்போம் என்பதை உறுயளிக்கும் விதமாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post திமுக என்றும் மக்களின் உரிமைக்காக போராடும்: பரந்தாமன் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.