திமுக இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது: பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

1 day ago 4

மதுரை: திமுக இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது என்று மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை தயார்படுத்தும் விதமாக மதுரையில் ஜூன் 1ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதற்காக நேற்று முன்தினம் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். மாலையில் பெருங்குடி முதல் கரிமேடு வரையில் சுமார் 25 கிமீ தொலைவிற்கு 4 மணி நேரம் ரோடுஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை பொதுக்குழு நடக்கும் உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வேனில் கிளம்பினார். காலை 8 மணிக்கு கிளம்பியவர் கோ.புதூர், மூன்று மாவடி, சர்வேயர் காலனி சிக்னல், மாட்டுத்தாவணி, உத்தங்குடி வரை மினி ரோடு ஷோ நடத்தினார். 50க்கும் மேற்பட்ட இடங்களில் செண்டை மேளம் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

காலை 9.30 மணியளவில் உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்த முதல்வருக்கு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி எம்எல்ஏ, சேடபட்டி மணிமாறன் மற்றும் தங்கதமிழ்செல்வன் எம்பி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகவரித்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி ெவள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி,ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவங்குவதற்கு முன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 27 தீர்மானங்களும், கட்சி அமைப்பு சார்ந்த ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் தொன்மையான தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும் – தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும் – வெற்றியைநோக்கி உழைக்கவும் இந்த பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். திமுக வழக்கமான அரசியல் கட்சி அல்ல! வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும் – போகும்! ஆனால், கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம்,

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றைப் படைத்த இயக்கம், நம்முடைய இயக்கம்! எத்தனை சோதனை நெருப்பாறுகள் வந்தாலும், அதில் எதிர்நீச்சல் போட்டு, உயர்ந்து நிற்கும். இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது… நான் தொடக்கத்தில் சொன்னது போன்றே, இது வழக்கமான பொதுக்குழு அல்ல… ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது.

திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திமுக ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது. உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது.

என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்! உங்கள் மேல் மட்டுமல்ல, இந்த பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் – வெயில் மழை பார்க்காமல் – தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். திமுக இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்!

உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதல்வராக்கி உயர்வை தந்தது, நீங்களும் – மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்! இப்படிப்பட்ட தொண்டர்கள் காத்து நிற்பதால்தான், 75 ஆண்டுகளைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி, அதே வேகத்துடன் நடைபோடுகிறோம்! சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும்.

உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும். திமுகவுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், திமுக ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க-திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்.

ஒன்றிய பா.ஜ. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். * பொருளாதார ரீதியான முட்டுக்கட்டைகள், * அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள்,

* ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், * உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பா.ஜ. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திமுகவிற்கு எதிராக – திமுக ஆட்சிக்கு எதிராக, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள்.

சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017ம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார்.

அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.வுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள்! ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.விடம் சரணடைந்துவிட்டார். அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.

என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதல்வராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன… காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை. நாம் கேட்பது… ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள்! ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக பா.ஜ.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார்.

அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பா.ஜ. கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள்.

பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது! இந்தி மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

தேர்தல் களத்தில் நீங்கள் பரப்புரை செய்ய செல்லும்போது, நாம் மக்களுக்காக என்ன எல்லாம் செய்திருக்கிறோம் – நம்முடைய ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களால், உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி என்று, உங்கள் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கடந்த காலத்தில் இருந்த நிலைமையை கம்ப்பேர் செய்து உங்கள் ஸ்டைலில் நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.

அதோடு, உங்கள் பகுதிகளில் எத்தனை பேர் நம்முடைய திட்டங்களால் பயனடைந்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பார்த்து பார்த்து நாம் திட்டங்களை செய்திருக்கிறோம். நம்முடைய திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ இரண்டரைக் கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை சிந்தாமல் – சிதறாமல் நம்முடைய கூட்டணிக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பும் – கடமையும் உங்களுக்குத்தான் இருக்கிறது!

அதேபோன்று, தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் – என் கட்சி – என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். “நானும் – என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்! தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் வந்து உங்களை சந்திப்பார்கள்.

புதிய நிர்வாகிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். 234 தொகுதிகளில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை சந்திக்க திமுகவின் கட்டமைப்புகளை ஓராண்டுக்கு முன்பே முழுமையாக அமைத்துவிட்டோம். இதை வரும் காலங்களில் செயல்படுத்தினாலே பெரிய வெற்றியை எளிதாக அடையலாம்.

பா.ஜ.விடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம். தமிழ்நாடு முழுவதும் எத்தனை உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

அதெல்லாம் தொய்வில்லாமல் சொன்ன தேதியில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றால், மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள். எனக்கு தெரிந்தது, அரசியல் மட்டும்தான். கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். ஆனால், நான் அரசியல் – அரசியல், உழைப்பு – உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால்கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன்.

ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். “தலைவர் சொன்ன பணியை முடித்துவிட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்” என்று சொல்ல வேண்டும். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்பதுதான் என்னுடைய இந்த பொதுக்குழுச் செய்தி.

திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்த பயணத்தை – சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும்! அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து பகல் 1 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் சைவம், அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பொதுக்குழுவிற்காக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* பொருளாதார ரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பா.ஜ. அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.

* கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாள் வஞ்சக பாஜ-துரோக அதிமுகவை விரட்டியடித்து 2026ம் ஆண்டிலும் திமுக ஆட்சி தொடர களப்பணி: – 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

1. கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாட வேண்டும்.
2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் திமுக தலைவர், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு.
3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்துகிறது திராவிட மாடல் அரசு.
4. உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினர் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்.
5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்குப் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
6. ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் – இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பணி தொடரத் துணை நிற்போம்.
8. ஏழை, எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.
9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்.
10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
11. கீழடி அகழாய்வை மறுக்கும் தமிழ் விரோத பாஜ அரசுக்குக் கண்டனம்.
12. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜ அரசுக்கு கண்டனம்.
13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துகளைச் சூறையாடும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
14. ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜ அரசுக்கு கண்டனம்.
15. மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் அநீதிகள் தொடர்வதற்கு கண்டனம்.
16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
17. சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும், முறையாகவும் நடத்த வேண்டும்.
18. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
19. ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு.
20. உச்சநீதிமன்றம் குறித்த குடியரசுத் துணைத்தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்.
21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜ அரசுக்குக் கண்டனம்.
22. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட வேண்டும்.
23. மாநிலத்தில் சுயாட்சி மலரட்டும்.
24. பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் தொண்டர்கள் துணை நிற்போம்.
25. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என உருவாக்கும் வகையில் அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்.
26. அதிமுக ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு முதல்வருக்கு வரவேற்பு.
27. வஞ்சக பாஜவையும், துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026ல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
இவ்வாறு 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்
மதுரை பொதுக்குழுவில் திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சி அமைப்பு ரீதியான அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.

* தொடர் வெற்றிக்கு காரணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்கு காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான்.

நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி-விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்’’ என்றார்.

* பொதுக்குழு பாடல் வெளியீடு
திமுக பொதுக்குழுவை முன்னிட்டு திராவிட மாடல் வெர்ஷன்-2 என்ற பெயரில் 4.26 நிமிட பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘திராவிட முன்னேற்ற கழகம், அது எல்லாருக்கும் ஒண்ணான குடும்பம், அது வந்தாலே துன்பங்கள் விலகும்’ என்ற வரிகளுடன் துவங்கும் இந்த பாடல் கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

* இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்
பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக என்று இயக்கம் தொடங்கும்போதே, இளைஞர்களால் உருவான இயக்கம். அண்ணாவுக்கு அப்போது 40 வயதுதான். கலைஞருக்கு 25 வயசு. பேராசிரியருக்கு 27 வயசு. நாவலர், மதியழகன் அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள்தான் அரசியல் களத்திலும், போராட்டக் களத்திலும் முதன்மையாக நின்று பல இளைஞர்களை ஈர்த்தார்கள். திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். திமுகவில் இப்போது 23 அணிகள் இருக்கிறது.

புதிதாக இரண்டு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இதில் பெரும்பாலான அளவில், நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமனம் செய்யுங்கள்! அணிகள் அனைத்துமே, தாய்க் கழகத்திற்கு வலு சேர்க்கத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். ஊக்கப்படுத்துங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்’’ என்றார்.

* ரூ.10 லட்சம் நிதி திமுக நிர்வாகிகள் வரவேற்பு
விபத்தில் உயிரிழக்கும் திமுக உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக்கழகம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பை திமுக நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து, கோவை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர், கனிமொழி பத்மநாபன் (32) கூறுகையில், ‘சாலை விபத்தில் இறக்கும் கட்சியினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், இறந்தவர்களின் குழந்தைகள் 21 வயதுக்குள் இருந்தால் அவர்களின் கல்வி செலவை கட்சியே ஏற்கும் என்ற அறிவிப்பு, அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது’ என்றார்.

* தொண்டர்களுடன் உணவருந்திய தலைவர்
பொதுக்குழு கூட்ட அரங்கின் அருகே சைவம் மற்றும் அசைவ விருந்துக்கு தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு, பி.மூர்த்தி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்பி ஆ.ராசா, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். சைவ உணவுகளில் பரிமாறப்பட்ட சப்பாத்தி, வெஜ் கட்லட், சைவ சிக்கன் வறுவல், வெஜிடபிள் பிரியாணி, கூட்டு பொரியல், கதம்ப பொரியல், குல்கந்து பர்பி உள்ளிட்டவற்றை முதல்வர் விரும்பி சாப்பிட்டார்.

* ‘மதுரை குலுங்க குலுங்க’முதல்வர் நெகிழ்ச்சி
மதுரையில் நேற்று முன்தினம் நடந்த தனது ரோடு ஷோ நிகழ்ச்சி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “மதுரை குலுங்க குலுங்க” மாலை 4.30 மணி முதல் 9.30 வரை திரளாக வந்து வரவேற்ற மாமதுரையின் அன்பில் நெகிழ்ந்தேன்! பாசத்துக்கு அகராதி சொல்லும் பொருளே மதுரை என வரவேற்ற மக்களுக்கு நன்றி! என குறிப்பிட்டுள்ளார்.

* தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திப்பேன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக – எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது’’ என்றார்.

* முதல் நாளே திரண்டனர்
திமுக பொதுக்குழு நேற்று காலை நடந்தாலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலையே மதுரை வந்தனர்.

* மன்மோகன்சிங், விஜயகாந்த், குமரிஅனந்தனுக்கு இரங்கல்
திமுக பொதுக்குழு துவங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், கட்சி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

* புதிய உறுப்பினர் சேர்க்கை: சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
பொதுக்குழுவில் புதிய உறுப்பினர் சேர்க்கை எனும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர்.

இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும்.

திமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை, திமுகவின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு, வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட. பகுதி-நகர ஒன்றிய பேரூர் வட்ட-கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.

அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* ‘கோமாளிகள் நம்மை வெல்ல முடியாது’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சமத்துவம்-சுயமரியாதை – சமூகநீதி – ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம்! இனத்துக்காக உரிமைக்குரல் எழுப்புகிறவர்கள் நாம்! கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம்! கொள்கையை பரப்ப கட்சியும் – கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!’ என்றார்.

* விபத்தில் இறந்த கட்சி உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்த பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும். நான் உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது, பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும், அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் தொண்டர்களும்தான் திமுகவின் வலிமை.

நிர்வாகிகளை, தொண்டர்கள் முன்னோடிகளாக கருத வேண்டும். தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது. அதேபோல் நிர்வாகிகள் இல்லாலும் செயல்பட முடியாது. இருவருமே நம்முடைய கொடியில் இருக்கும் கருப்பு சிவப்பு போன்று, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் – தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தாங்கும் தூண்கள் இல்லாமல், கோபுரம் நிற்க முடியாது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்’’ என்றார்.

The post திமுக இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது: பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article